திருவாரூர் அருகே உள்ள புலிவலத்தில் 800 ஆண்டுகள் பழமையான வழிகாட்டி அய்யனார் ஆலயம் உள்ளது.இந்த ஆலயம் மிகவும் பாழடைந்தும் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டும் காணப்பட்டது. இதனையடுத்து அந்த இடத்தில் புதிய ஆலயம் கட்டும் முயற்சியில் அப்பகுதி கிராமவாசிகள் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். \r\n\r\nஅதன் அடிப்படையில் ஆலயம் இருந்த இடத்திற்கு அருகில் தற்காலிக குடில் அமைத்து அதில் வழிகாட்டி அய்யனார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.முன்னதாக அருகில் உள்ள கோவில் கட்டும் இடத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து வழிகாட்டி அய்யனார் வீதி உலா என்பது நடைபெற்றது. \r\n\r\nமுன்னதாக வழிகாட்டி அய்யனாருக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு உற்சவரான வழிகாட்டி அய்யனார் அலங்கரிக்ப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்ட பின்பு கூடி இருந்த பக்தர்கள் மலர்களை தூவி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க வழிகாட்டி அய்யனார் வீதி உலா காட்சி புலிவலத்தை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்தது.அப்பகுதி மக்கள் தங்கள் வீட்டு வாசலில் வழிகாட்டி அய்யனாருக்கு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். \r\n\r\nபழமையான இந்த ஆலயத்தின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் தம்பி செந்தில் என்.வி.டி. தட்சிணாமூர்த்தி முருகா உள்ளிட்ட கிராம வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.\r\n\r\nதிருவாரூர் செய்தியாளர் இளவரசன்.
